Tuesday, August 16, 2005

அவர்கள் கற்பிழந்துவிட்டார்கள் - அப்துல் ரகுமான்

லைஞர் மு. கருணாநிதி கலந்துகொண்ட இளையபாரதி நூல் வெளியீட்டு விழாவில் (5.10.2003) அசோகமித்திரன், ஞானக்கூத்தன். வண்ணதாசன், வேல. இராமமூர்த்தி, கலாப்ரியா, இன்குலாப், பா. கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அசோகமித்திரன் தவிர ஏனையோர், கலைஞரைப் போற்றிப் பேசினர். இதற்கு அடுத்த நாள், ஜெயமோகன், இந்தத் தீவிர இலக்கியவாதிகளை விமர்சித்தும் கலைஞரின் படைப்புகள், இலக்கியம் அல்ல என்றும் ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் போட்டார். அது, குப்பென்று பற்றிப் பரவத் தொடங்கிவிட்டது.

இளையபாரதி விழாலில் பேசிய அப்துல் ரகுமான், "இதுவரை ஒதுக்கி வைத்திருந்த இவர்கள், மேடையில் இடம் கொடுத்தவுடன் புகழத் தொடங்கிவிட்டார்கள்" என்று வெளிப்படையாகச் சொன்னது, இந்தச் சர்ச்சையைப் பெரிய அளவில் தூண்டிவிட்டது. இதைத் தொடர்ந்து வாத - பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்க, சிற்றிதழ்ப் படைப்பாளிகள் மீதான அப்துல் ரகுமானின் பார்வையைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் எழுந்தது.

மேலும் பல சர்ச்சைகளைத் தூண்டக்கூடிய அந்த நேர்காணல் இதோ;


பிரச்சாரம், இலக்கியம் ஆகுமா?

பிரபல இதழ்களில் எழுதுவோர், சிற்றிதழ்வாதிகள் என எப்போதுமே இரு பிரிவுகள் உண்டு. அவர்கள், எங்களைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள். இது, நேர்மையில்லாத
செயல். எங்களுக்கு எழுதத் தெரியாது என்று சொன்னால் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அடுத்த குற்றச்சாட்டு, திராவிட இயக்கம், படைப்பாளிகளை உருவாக்கவில்லை என்பது. முதலில் திராவிட இயக்கம், கலை - இலக்கிய அமைப்பல்ல; விடுதலை இயக்கம். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பு உள்ளது. அது, ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டது. எழுதியோர், கவிஞர்கள் அல்லர். போராளிகள். 'கவிதை எங்கள் ஆயுதம்' (poetry is our weapon) என்று அவர்கள் முழங்கினார்கள். இப்படிப் பலர் இனப் போராட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். கருப்பர் கவிதை (Black poetry) என்பது உலக அளவில் பெரிதாகச் சுட்டப்படுகிறது. கருப்பின மக்களை அடுத்து, பாலஸ்தீனக் கவிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இராக்கில் குர்திஷ் கவிஞர்கள் சிறப்பானவர்கள். இவர்களின் கவிதைகளோடு 30, 40 வலைத்தளங்கள் உள்ளன. அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கம், நிறைய கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பொதுவுடைமை நாடுகளிலும் இந்தப் போக்கு உண்டு. பிரச்சார இலக்கியத்தை உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

அதே வேலையைத்தான் திராவிட இயக்கம் செய்தது, கலைஞரும் அண்ணாவும் இலக்கியத்தின் மூலம் பேரளவில் மக்களைக் கவர்ந்தார்கள், அதன் மூலம் ஆட்சிக்கும் வந்தார்கள். இது, கலை, இலக்கியம் பெற்ற வெற்றி. இது இலக்கியம் இல்லை என்றால் அவனுக்கு இலக்கியத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்று பொருள்.

அப்படிச் சொல்பவன் ஆத்திகனாய் இருக்கலாம். பிராமண வழியில் வந்தவனாய் இருக்கலாம்; காங்கிரஸ்காரனாகவோ தேசியவாதியாகவோ இருக்கலாம். ஆக, திராவிடத்துக்கு எதிரானவன். இதை அரசியல் களத்தில் பேசலாம்.

பாரதியின் தேசிய - சுதேசிப் பாடல்களை வெள்ளைக்காரன் ஒப்புக்கொள்வானா? அப்படிப்பட்டது, இது. பாரதி, கவிதையில் பிரச்சாரம் செய்தால் அது இலக்கியம் ஆகிறதாம். பாரதிதாசன் அப்படிப் பாடினால் அது, இலக்கியமாக இல்லையாம், இது, இரட்டை வேடம்.

பிரச்சாரம் செய்த சைவ- வைணவப் பாடல்களை இலக்கியம் இல்லை என்று சொல்வாயா? திராவிட இயக்கப் படைப்புகள் மட்டும் இலக்கியம் இல்லை எனில் உன் நோக்கம் வேறு என்று தெரிகிறது.

சிற்றிதழ்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?

'மணிக்கொடி', 'சரஸ்வதி' காலத்தில் வேறாக இருந்தது, 'எழுத்து' ஆரம்பித்தபோதே (Polimics)
தமிழ்ப் புலவர்களை ஏசுவது தொடங்கியது. பிழையான தமிழ் நடையிலும் எழுதினார்கள்.

பிழையான தமிழ்நடை என்றால்?

'எழுத்தை'ப் படித்துப் பார்த்தால் தெரியும். வாக்கியப் பிழைகள் நிறைய இருக்கும். இப்படிச் செய்துகொண்டே தமிழ்ப் புலவர்களை ஏசினார்கள். பேராசிரியர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை என்று சி.சு. செல்லப்பா குற்றம் சாட்டி வந்தார். நான் அவரை விமர்சித்தேன். பேராசிரியர்கள் மொழியாசிரியர்களே. அவர்கள் படைப்பாளிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றேன்.

இப்படிப்பட்ட சி.சு. செல்லப்பாவை மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேசுமாறு பேராசிரியர்கள் அழைத்தார்கள். அதற்குப் பிறகு அவர் பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார். இது, நேர்மை யில்லாத செயல்.

சிறுபத்திரிகை நடத்தியோர் அனைவரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைத் திட்டினார்கள். இப்போது அதற்கே எழுதுகிறார்கள். அது, கற்போடவும் இல்லை.

கற்போடவும் இல்லை என்றால்?

300 பிரதிக்கு மேல் அச்சிட்டால் சிறு பத்திரிகை இல்லை. பெரிய பத்திரிகைகளுக்கு விற்பனைதான் நோக்கம்; இலட்சியத்தைப் பற்றிக் கவலையில்லை என்று பேசினார்களே, இப்போது அந்தப் பத்திரிகைகளில் எழுத வந்துவிட்டார்கள். இன்றும் வணிகப் பத்திரிகைகளில் கவர்ச்சிப் படம் போடுகிறார்கள். 'எங்கே மச்சம் இருக்கு' என்று தேடச் சொல்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்ப இவர்கள் எழுத வந்ததாகத்தானே அர்த்தம். சினிமாவுக்கும் டி.வி.க்கும்கூட வந்துவிட்டார்கள்.

வணிக இதழ்களின் இலக்கியக் கண்ணோட்டம் மாறியிருக்கலாம் இல்லையா?

ஜனங்களுக்குத் தேவையானதைக் கொடுக்காவிட்டால் அவை விழுந்துவிடும். இது, வெறும் வாய்ப்புக்காக எழுதுவது. வணிகப் பத்திரிகைகளுக்குக் கலவையான வாசகர்கள் (Mixed readers) உண்டு. அந்தப் பத்திரிகைகளை நானும் வாங்குகிறேன். தீவிர இலக்கியவாதி என்று சொல்கிறவனும் வாங்குகிறான்.

வணிகப் பத்திரிகை என்பது, ஓட்டல் மாதிரி; எல்லா உணவையும் வைத்திருக்கும். எது வேண்டுமோ அதைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். போண்டா வேண்டுவோர் அதைச் சாப்பிடட்டும். அதற்காக, தோசை மட்டும்தான் உணவு, மற்றது உணவே இல்லை என்றால் எப்படி?

சிற்றிதழாளரின் படைப்புகளில் ஆபாசம், வக்கிரம், அசிங்கமாக எழுதுதல் அதிகமாகிவிட்டது. பெண் கவிஞர்கள், 'யோனி கடுக்கிறது' என்று எழுதியுள்ளார்கள். இதற்குக் 'கூப்பிடுவதாக' அர்த்தமா? இதை இலக்கியம் என்கிறார்கள். ஓர் இனத்தை எழுப்புவது இலக்கியம் இல்லையாம்.

உங்களை இருட்டடிப்பு செய்ததாய்ச் சொன்னீர்களே?

எங்களை இருட்டடிப்பு செய்ய முடியாது. கண்ணதாசனையோ என்னையோ, வைரமுத்து, தமிழன்பன், இன்குலாப், சிற்பி, புவியரசு போன்றோரையோ மறைக்க முடியாது. பூனை, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? ஏற்கெனவே நாங்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள். நாங்கள் எழுதிய ஒன்றுகூட கவிதை இல்லை என்றால் அது, அயோக்கியத்தனம்.

'புறநானூற்றிலிருந்து இன்றுவரை' என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார்கள். அதில் பாரதிக்குப் பிறகு சிறு பத்திரிகைக் கவிஞர்களுக்குத் தாவிவிட்டார்கள். இடையில் முன்பு சொன்ன யாருமே இல்லை. யாரோ குப்புசாமி, ராமசாமி பற்றி எழுதியுள்ளார்கள். சிறுகதைகளைத் தொகுத்தபோதும் இப்படி ஒரு மோசடி நடந்தது.

'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற நூலுக்காக ஜெயகாந்தனைச் சிவசங்கரி பேட்டி எடுத்தார். அப்போது, திராவிட இயக்கம் கவிஞர்களைத் தரவில்லையா? என்று கேட்டார். 'கண்ணதாசனும் அப்துல்ரகுமானும் திராவிட இயக்கம் தந்த கவிஞர்கள்தானே' என்று ஜெயகாந்தன் சொன்னார்.

இப்போதைய சிற்றிதழ் உலகம் எப்படி இருக்கிறது?

அநாகரிகமாக அவதூறு பேசுவதும் ஏசுவதும் சிற்றிதழ்களிடம் அதிகரித்துள்ளது. 'நாயே பேயே' என்றுகூட திட்டிக்கொள்கிறார்கள். உடல் ஊனத்தைக் கேலி செய்வது, மனித இனத்திலேயே மிகப் பெரிய அநாகரிகம். ஒரு கவிஞரை 'நொண்டி நாய்' என்று வசை பாடியுள்ளார்கள். இது, கீழ்த்தரமான பண்பாடு.

கூவத்தில் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு வெளியீட்டு விழா என்கிறார்கள். கவிஞர்கள், சாராயக் கடையில் கூடிக் கூட்டம் நடத்தி, அடிதடியாகி ஒருவரின் பல்லே உடைந்தது.

இளையபாரதி விழாவில் அசோகமித்திரன் பேச வந்தபோது, 'கலைஞரே' என்றோ, 'அவைத் தலைவரே' என்றோ அழைக்காமல் நேரடியாக இளையபாரதி கவிதையைக் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார். அவருக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை.

சிற்றிதழாளர்கள் நாகரிகமில்லாமல் ஏசிக்கொள்வது இருக்கட்டும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்கள் எந்தத் தரத்தில் பேசுகிறார்கள்?

அது இங்கே தேவையில்லாதது. திராவிடக் கட்சி மட்டும்தான் அப்படிப் பேசுகிறதா? எந்தக் கட்சிதான் நாகரிகமாகப் பேசுகிறது? அவர்களைவிட மேம்பட்ட அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்வோர் இப்படி நடக்கலாமா? என்பதுதான் கேள்வி.

நல்ல கருத்தை எதுகை மோனையோடு சொன்னால் அது இலக்கியமாகிவிடுமா?

காலங்காலமாக அதுதான் நடந்து வருகிறது. இப்போது சொல்லும் புதிய மதிப்பீடுகள் எல்லாம் இனித்தான் நிலைபெற வேண்டும். எதுகை மோனை இல்லாமல் குப்பை கூளம் எழுதினால் அது மட்டும் இலக்கியமாகிவிடுமா?

கலைஞர் எழுதிய எல்லாவற்றையுமே இலக்கியம் என்று நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு பத்திரிகையாளர். பலவிதமான வடிவங்களில் அவர் எழுத வேண்டியிருக்கும். பாரதிக்கும் இதேதான். எழுதிய எல்லாமே இலக்கியமாகாது.

தலைசிறந்த படைப்புகள் என்று பட்டியல் போடுவது குறித்து...?

க.நா.சு. கூட இதைத்தான் செய்தார். சுந்தர ராமசாமியின் முன்னிலையில் க.நா.சு.விடம் கேட்டேன். 'எங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏற்கெனவே மக்களிடம் அறிமுகமாகிவிட்டோம்' என்றேன். 'உங்கள் 'பால்வீதி' நூல் பற்றிக் கட்டுரை எழுதி வைத்திருந்தேன். அந்தப் பிரதி காணாமல் போய்விட்டது' என்றார். அது சும்மா. காணாமல் போனால் மீண்டும் எழுத முடியாதா என்ன?

300 பேர் என்று சொல்வது எதனால்?

அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் போல் 300 பேர்தானா? அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? முகவரியாவது கொடுங்கள் என்று நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கேரளாவிலும் இதே 300 பேர் என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை படைப்பைப் பல்லாயிரம் பேர் படிக்கவேண்டும். அப்போதுதான் படைப்பின் நோக்கம் வெற்றியடையும்.

( அமுதசுரபி, நவம்பர் 2003)
----------------------------------------

நவம்பர் 2003 இதழில் கவிக்கோ அப்துல் ரகுமான், சி.சு.செல்லப்பா மீது ஒரு குற்றம் சாட்டியிருந்தார். 'மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்த பிறகு சி.சு.செல்லப்பா, பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார்' என்ற கூற்று, உண்மையில்லை. நான் அவருடன் நெருங்கிப் பழகியவன். அவர் கடைசிவரை பேராசிரியர்களைத் திட்டிக்கொண்டுதான் இருந்தார். தற்கால இலக்கியத்தில் தற்போது நாட்டம் காட்டத் தொடங்கிவிட்ட பேராசிரியர்களை ஏசுவது சரியில்லை என்று நானும் அவரிடம் கடைசிவரை எடுத்துச் சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.

- முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
(பால்நிலவனின் 'சூரிய முற்றம்' நூல் விமர்சனக் கூட்டத்தில்)

(( அமுதசுரபி, ஜனவரி 2004)

4 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பு அண்ணா
கொஞ்சம் பழைய பேட்டியாக இருந்தாலும், சில இடங்களில் முரண்கள் இருந்தாலும் பொதுவில் நன்றாக இருந்தது.
நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

செவ்விக்கு நன்றி.

Anonymous said...

அய்யா “முனைவர்” அண்ணா கண்ணன், க.நா.சு மரணமடைந்தது 1988ல்.

நீங்க பொறந்தது 1975ல்.

க.நா.சு. மரணத்தின் போது உங்க வயசு 13.

அப்ப சுந்தரராமசாமி முன்னிலைல க.நா.சு.கிட்ட நீங்க நியாயம் கேட்ட உண்மைச் சம்பவம் நெசமாலுமே புல்லரிச்சுப் போச்சு சாமியோவ்.

நல்லாப் பொளக்கறீங்கப்பா ஈனப் பொழப்பு.

முனைவர் அண்ணாகண்ணன் said...

அனானி,

சுந்தரராமசாமி முன்னிலைல க.நா.சு.கிட்ட நியாயம் கேட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான். நான் இல்லை.

நேர்காணல் தெளிவாகத் தானே இருக்கிறது. மேலும், இது என்னுடைய நேர்காணல் வலைப்பதிவு. இதில் பெரும்பாலும் கேள்விகள் மட்டுமே என்னுடையவை.

இவ்வளவு அவசரமாகத் தவறாகப் புரிந்துகொண்டு, வார்த்தைகளை விடுவதைத் தவிர்க்கலாம்.