Thursday, December 24, 2009

எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

 எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; www.tamilnool.com, http://thevaaram.org ஆகிய இணையதளங்களை உருவாக்கி நடத்துபவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்.... எனப் பல பெருமைகளுக்கு உரியவர்.

தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நட்புப் பூண்டவர். 27.04.2009 அன்று சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதத்தின் போது அவரைச் சந்தித்தார். உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். அதே நாளன்று மதியம், சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன், சச்சிதானந்தனுடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:

அ.க.: இன்று கலைஞரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?

சச்சிதானந்தன்: உண்ணாவிரதம் வெற்றிபெற வேண்டும். ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும். விரைந்து அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் எனக் கூறினேன்.

வெளியே வந்ததும் தொலைக்காட்சியினர் பேட்டி கேட்டனர்.

இராசபக்சா அரசு கொடுமையான அரசு. யார் சொல்லையும் கேட்காத அரசு. ஒபாமா சொல்லிக் கேட்கவில்லை. பிரித்தானியப் பிரதமர் சொல்லிக் கேட்கவில்லை. தோக்கியோக் கூட்டு நாடுகள் பல முறை சொல்லியும் கேட்கவில்லை. இந்தியா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. வேறு வழியில்லை என்பதால் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைஞர் உண்னா நோன்பு இருக்கிறார். ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையே கிடைக்கும் எனக் கூறிவிட்டு வந்தேன்.

அ.க.: இது உச்சக்கட்ட நாடகம் என்று வைகோ கூறியிருக்கிறாரே?

சச்சிதானந்தன்: தமிழக உள்கட்சி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எல்லோருடைய ஆதரவும் ஈழத் தமிழருக்குத் தேவை.

அ.க.: கலைஞர் உங்கள் காதில் கிசுகிசுத்தது என்ன?

சச்சிதானந்தன்: சேதுக் கால்வாய் தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன் உங்கள் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்தேன். நன்றாக இருந்தது எனக் கலைஞர் என்னிடம் தெரிவித்தார்.

அ.க.: இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

சச்சிதானந்தன்:
போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் வானிலிருந்து கொடும் தாக்குதலை இன்று (27.4.2009) மணி 12.50க்கும் 13.10க்கும் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தியதாகப் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறிய செய்தி மின்னம்பலத்தில் உள்ளதே.

இராசபக்சாவின் கபட நாடகத்தின் உச்சக் கட்டம் இதுவன்றோ? சொல்வதைச் செய்யமாட்டார், செய்வதைச் சொல்லமாட்டார். இராசபக்சாவின் உண்மை வடிவத்தை உணராதார் பேதைகளே!

1050 ஆண்டுகளுக்கு முன் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் இவ்வாறு ஏமாற்றியதால் இராசராசன் படையெடுத்து இலங்கையின் பாதியைக் கைப்பற்றினான். பின்னர் இராசேந்திரன் முழுமையாகக் கைப்பற்றி மகிந்தனைச் சிறைப்பிடித்தான். சிங்களத்தை வென்றதால் சிங்களாந்தன் என்ற சோழ மன்னரின் பட்டப் பெயரில் தமிழகத்தில் ஊர் ஒன்று இருப்பதை நினைவூட்டுகிறேன்.

இந்த மகிந்தனுக்கும் அதே கதி விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்.

அ.க.: அப்படியானால், போர் நிறுத்தம் என்பது வெறும் வார்த்தைதானா?

சச்சிதானந்தன்: எல்லோருக்கும் ஏமாற்றமே. இராஜபக்சா யார் சொல்லையும் கேட்கமாட்டார். இந்தியா அவரை வற்புறுத்தியதில்லை. பிரபாகரன் இல்லாத சூழலை இந்திய அதிகார வர்க்கம் விரும்புகிறது. இஃது இராசபக்சாவுக்குத் தெரியும். தமிழக மக்களையோ, அரசியல் தலைவர்களையோ இந்திய அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பொட்டு அம்மானையாவது சரணடையச் சொல்லுங்கள் என இந்திய அதிகாரிகள் கொழும்பில் வைத்துத் தமிழர் கூட்டமைப்புச் சம்பந்தனைக் கேட்டதை மறக்கமுடியுமா? இந்தியாவுக்கு விருப்பமானதைச் செய்து கொடுக்கும் இராசபக்சே, போரைத் தொடருவார். கலைஞருக்கு மேலும் அவப்பெயர் தேடுவதில் இராசபக்சாவின் பிரித்தாளும் ததந்திரம் வெற்றி பெறும்.

அ.க.: இதை அறிந்தால், கலைஞர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்குவாரா?

சச்சிதானந்தன்: அவரின் அடுத்த நடவடிக்கையை நான் ஊகிக்க முடியாது.

அ.க.: தமிழ் ஈழத்துக்கு இலங்கைக்குள் இடமில்லை எனக் கோதபாயா ராஜபக்சே கூறியுள்ளாரே?

சச்சிதானந்தன்: போரை நடத்துவதற்கும் இனப் படுகொலையைத் தொடர்வதற்கும் சிங்களவர் கொண்டுள்ள அறிந்தும் அறியாதது போலச் சொல்லும் காரணங்களை மேலோட்டமாகவே பார்க்க. ஆழமான பொருள் அதில் இல்லை. தமிழீழம், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம். இதை அறியாதவரல்ல கோதபாயா.

அ.க.: ஈழத் தமிழர் சிக்கல் தீரத் தமிழ் ஈழமே ஒரே வழி என்ற ஜெயலலிதாவின் அறிவிப்புக் குறித்து?

சச்சிதானந்தன்:

1. போர் நிறுத்தம்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனியான ஈழத் தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழருக்கு இயல்பான உரிமைகள்.

3. மேல் இரண்டும் இல்லை எனில் விடுதலை பெற்ற தனி நாடாக ஈழம்.

4. 10,000 கோடி ஈழத் தமிழர் மீளமைப்பு நிதி.

5. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லை.

நாகர்கோயில் கூட்டத்தில் இந்த ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்த ஜெயலலிதா, மூன்றாவது அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். சேலம் கூட்டத்தில் முதல் இரண்டுக்கும் வாய்ப்பில்லை எனக் கூறி உள்ளார்.

கும்பகோணம் இரவிசங்கரை ஜெயலலிதா மேற்கோள் காட்டியதை அந்த இரவிசங்கர் மறுத்திருக்கிறார், மீண்டும் இராசபக்சாவைச் சந்திக்கும் இரவிசங்கரின் நப்பாசையில் இருப்பவர் இரவிசங்கர். இலங்கையில் அமைதியைக் கொணர்ந்தால் நோபல் பரிசு தனக்கும் கிடைக்கும் என்ற கனவில் இருப்பவர் இரவிசங்கர்.

ஜெயலலிதா சொன்னதற்காக மட்டுமல்ல, ஈழத் தமிழரின் ஒரே அரசியல் நோக்கம் தமிழீழம் என்பதால் சேலம் பேச்சு வரலாற்றுப் பதிவே.

அ.க.: இலங்கையை ஆதரிக்கும் சீனா, ஈழத்துக்கு எதிராகச் செயல்படுவது போல் இருக்கிறதே?

சச்சிதானந்தன்: முன்பு இங்குள்ள பொதுவுடைமைவாதிகள் எம் அரசியல் நோக்கத்தை ஏற்கவில்லை. 2.10.2008 சென்னை உண்ணா நோன்பு பொதுவுடைமைக் கட்சிகளின் உபயம். அன்று முதலாகத் தமிழகத்தையே ஈழத்தை நோக்கி விழிக்க வைத்தவர்கள் அவர்கள். ஈழத் தமிழரின் அளவற்ற பொறுமையே சிங்களவரின் வெறுமையைத் தோலுரித்துக் காட்டியது பொதுவுடைமைவாதிகளுக்கு. சீனாவுக்கும் அதே நிலைதான். காலம் கனியும். சீனா எங்களை ஏற்கும்.

அ.க.: இந்தச் சூழலில் ஈழ மக்களும் விடுதலைப்புலிகளும் செய்ய வேண்டியவை என்னென்ன?

சச்சிதானந்தன்: நம்பிக்கையே வாழ்வு. ஈழத் தமிழர் விதிவிலக்கல்ல.

அ.க.: தமிழீழம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?

சச்சிதானந்தன்: எட்டுகின்ற தொலைவில்தான்..!

நன்றி: சென்னை ஆன்லைன்

No comments: