Thursday, December 24, 2009

ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்

 ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்
பாட்யூனிவர்சல் என்ற ஒலி இதழின் ஆசிரியர் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன். புகழ்மிகு அறிஞர்கள் பலருடன் தொலைபேசி வழியே உரையாடி, அதனைப் பதிந்து, தன் தளத்தில் வெளியிடுகிறார். அவரைச் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை (Chat) வழியே நேர்கண்டார். இந்த உரையாடலில், ஒலிப்பதிவுகள் (பாட்காஸ்ட்) தொடர்பான பல்வேறு செய்திகளைச் சீனிவாசன் பகிர்ந்துகொண்டார். அந்த இ-நேர்காணல் இதோ இங்கே:

அ.க.: பாட்காஸ்ட் என்பதைத் தமிழில் இணையவழி ஒலிபரப்பு எனலாமா?

சீனிவாசன்: நான் அதை இணைய ஒலி இதழ் என்று கூறியும் எழுதியும் வருகிறேன். இது ரேடியோ போன்று ஒலிபரப்பு இல்லை. ரேடியோவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கேட்க முடியும். ஆனால், பாட்காஸ்ட்டை எந்த நாளும், எந்த நேரமும் கேட்கலாம். 2006ஆம் ஆண்டு நான் வெளியிட்ட இணைய ஒலி இதழகளை இன்றும் கேட்கிறார்கள்.

அ.க.: பாட் மாகசைன் என்பதை அவ்வாறு கூறலாம். பாட்காஸ்ட் என்பது வெப்காஸ்ட், பிராட்காஸ்ட், டெலிகாஸ்ட் என்பது போல் ஒரு செயலைத்தானே குறிக்கிறது?

சீனிவாசன்: நான் இதுவரை அதற்கான் தமிழ் வடிவத்தைப் பார்க்கவில்லை. நான் பாட் மாகசைன் என்று தான் கூறி வருகிறேன்.

அ.க.: சரி, இந்த ஒலி இதழ் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

சீனிவாசன்: ஜூன் மாதம் 2006இல், நான் பிளாக் காம்ப் போயிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக பிளாக் என்றால் என்ன என ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தேன். அந்த UnConference, பல இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். நான் ஒருவன் மட்டும் தான் வயதானவன். எல்லோரும் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். அப்போதுதான், எனக்கு பிளாக் மேல் ஆர்வம் வந்தது. நான் அடுத்த நிலைக்குப் போகலாம் என்று தீர்மானித்தேன். பிளாகின் அடுத்த நிலை பாட்காஸ்ட்தான். கிட்டத்தட்ட 2005 முதல் தான் பாட்காஸ்ட் பிரபலமாக ஆரம்பித்தது. உடனே, பாட்காஸ்ட் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். பாட்பசார் (podbazaar) என்கிற இணையதளத்தில், நிறைய இந்தியர்கள் பாட்காஸ்ட் துவங்க ஆரம்பித்திருந்தார்கள். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய தம்பதியினர் நடத்துகிறார்கள். இதன் தலைவர், சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. அவரையே முதன்முதலில், gizmo மூலம் ஒரு பேட்டி கண்டு அதை அவர்கள் தளத்தில் வெளியிட்டேன்.  இது தான் என் முதல் பாட்காஸ்ட் (http://www.podbazaar.com/dashboard/144115188075856257) 2006 ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்டேன்.

அ.க.: gizmo என்பது என்ன?

சீனிவாசன்: gizmo என்பது skype மாதிரி.

அ.க.: ஒலிப் பதிவுக்கு நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள், கருவிகள் பற்றிச் சொல்ல முடியுமா?

சீனிவாசன்: ரிகார்டிங்கிற்கு, ஒரு mp3 ரிகார்டர் வைத்துள்ளேன். அதில் நேரடியாக ரிகார்ட் செய்யலாம். மேலும் டெலிபோன் மூலம் ரிகார்ட் செய்கிறேன். இப்போது, audacity என்கிற மென்பொருளை உபயோகப்படுத்துகிறேன். சில சமயம் மொபைல் போனிலும் ரிகார்ட் செய்திருக்கிறேன். அனைத்தையும் audacity மூலம்தான் எடிட் செய்து, music ஐ மிக்ஸ் செய்து வெளியிடுகிறேன்.

அ.க.: இதுவரை எவ்வளவு ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்?

சீனிவாசன்: ஜூலை 2006இல் பாட்பசார் (Podbazaar) தளத்தில் பாட்காஸ்டுகளை வெளியிடத் தொடங்கினேன். செப்டம்பர் 2006 முதல் யூடியூபிலும் (YouTube) வெளியிடத் தொடங்கினேன். மார்ச்சு 2007 முதல் பிலிப் டிவியிலும் (Blip.tv) வெளியிட்டு வருகிறேன்.

இவற்றில் இது வரை பாட்பசார் (Podbazaar) தளத்தில் 122 ஒலிப்பதிவுகளை (ஆடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 56,381 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. பிலிப் டிவியில் 72 ஒலிப்பதிவுகளை (ஆடியோவுடன் வீடியோவும்) வெளியிட்டுள்ளேன். அவை 42,679 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. யூடியூபில் 21 ஒலிப்பதிவுகளை (வீடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 38845 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. ஆக மொத்தம் 215 ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். அவை 1,37,905 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன.

அ.க.: எத்தகைய ஒலிப்பதிவுகளை நேயர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்?

சீனிவாசன்: பாட்யூனிவர்சல், சீரியஸான பாட்காஸ்டுகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது. இவையே எந்த நேரத்திலும் கேட்க ஏற்றவையாக இருக்கும். நாங்கள் எல்லா விஷயங்களிலும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளோம்.

மதம், ஆன்மீகம் தொடர்பான 17 ஒலிப்பதிவுகள் 37,357 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 27.1%. இதே போன்று, டாக்டர் கலாம் மற்றும் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய 26 ஒலிப்பதிவுகள் 36,470 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 26.4%. இவை அல்லாத இதர 172 ஒலிப்பதிவுகள் 64,078 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 46.5%.

இந்த விவரங்களிலிருந்து நாங்கள் கண்டறிந்தவை, ஆன்மீக ஒலிப்பதிவுகளையும் கலாம் தொடர்பான ஒலிப்பதிவுகளையும் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதையே. இன்னொன்று, எங்கள் ஒலிப்பதிவுகள் இந்தியாவை மையமாகக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் அதிகமாக இவற்றைக் கேட்கிறார்கள்.

பிராட்பாண்டு, 3ஜி ஆகியவற்றின் அறிமுகத்தினால் ஒலிப்பதிவுகளை இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிகம் பேர் விரும்புவார்கள். 2010இல் ஒலிப்பதிவுகளுக்கான நேயர்கள் 5 மடங்கு அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அ.க.: பிலிப் டிவி, யூடியூப் ஆகியவற்றில் வெளியிடுவதையும் ஒலிப்பதிவுகளாகக் கணக்கிடலாமா?

சீனிவாசன்: நான் பாட்பசார், பிலிப் டிவி, யூடியூப் (podbazaar, bliptv, youtube) மூன்றையுமே பயன்படுத்துகிறேன். ஓடியோ, பாட்பீன் (odeo, podbean) ஆகியவற்றையும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், அவற்றை நான் கணக்கில் எடுக்கவில்லை.

அ.க.: ஆக, வீடியோ வடிவில் இருப்பதையும் ஒலிப்பதிவாக நாம் கணக்கிடலாம்?

சீனிவாசன்: ஆமாம். ஆடியோ, வீடியோ இரண்டையும் கணக்கிடலாம். ஆடியோ வடிவம், ஒலிபரப்பிற்கு மிகவும் ஏற்றது. இதனை ஐபாடுகளிலும் டவுன்லோடு செய்யலாம். நான் www.poduniversal.com தளத்தில் இப்போது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியைப் பற்றிய ஒலிப்பதிவினை ஒலி, ஒளி வடிவங்களில் அளித்துள்ளேன்.

அ.க.: தொலைபேசி வழி ஒலிப்பதிவு குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம் அவர்களை ஆறு முறை தொலைபேசியில் ரிகார்ட் செய்திருக்கிறேன். முதலில் அவர்கள் நேரத்தைத் தீர்மானித்த பிறகு, அவர்களது நம்பரை டயல் செய்வேன். நம் தொலைபேசியில் ஒரு ஜாக் இணைத்து, அதன் ஒரு பகுதியை என்னுடைய லாப்டாப்பில் செருகி விடுவேன். நம்முடைய பேட்டியைத் துவங்குமுன், எதிர் முனையில் இருப்பவரிடம் நாம் ரிகார்ட் செய்கிறோம் என்று தெரிவிப்பதுதான் மரபு. அவர்களது உரையாடலை audacityஇல் ரிகார்ட் செய்து விடுவேன்.

அ.க.: அப்துல்கலாம் உள்ளிட்ட பெரும் பிரமுகர்களை நேர்கண்டிருக்கிறீர்கள். அவர்கள் இந்த முயற்சியை எப்படி பார்த்தார்கள்?

சீனிவாசன்: முதன் முதலில் டாக்டர் கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவி முடிந்து வந்தவுடன் அவருக்கு என்னுடைய ஆசையை தெரிவித்தேன், அவரை இண்டர்வியூ செய்ய வேண்டுமென்று. அபோது இமெயிலில், அவரைப் பற்றி நான் ஏற்கெனவே செய்திருந்த ஒலிப்பதிவுகளை அனுப்பியிருந்தேன். அதையெல்லாம் அவர் பார்த்துவிட்டு, ஒரு நாள் மாலை திடீரென்று என்னுடைய மொபைலுக்கு போன் செய்து, பாட்காஸ்ட் பற்றிய முழு விவரங்களையும் சுமார் 20 நிமிடங்கள் கேட்டறிந்தார். எப்படி ரிகார்ட் செய்கிறேன், எந்த மென்பொருள் உபயோகப்டுத்துகிறேன் என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்தார். அதற்கு பிற்கு, அதே நாள் இரவு 8 மணிக்கு நேரம் கொடுத்தார். அப்போதுதான் அவரை முத்ல் முதலாக தொலைபேசியில் ரிகார்ட் செய்து வெளியிட்டேன். அண்மையில் கூட, தேர்தல் தொடர்பாக இளைஞர்களுக்கு என் பாட்காஸ்ட் வழியே தான் அறிவுரை வழங்கினார். அதை நான் தான், பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தேன். பல பிரபலங்கள் என்னுடைய பாட்காஸ்ட்டைக் கேட்கிறார்கள்.

அ.க.: நீங்கள் நேர்கண்ட முக்கிய பிரமுகர்களில் சிலரைச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம், டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், டாடா நிறுவனத்தில் இரண்டாம் நிலையிலுள்ள கிஷோர் சவுக்கர், பல எம்.பிக்க்ள், இந்தியா விஷன் நூலைக் கலாமுடன் இணைந்து எழுதிய டாக்டர் ஒய். எஸ். ராஜன், அணமையில், சிதம்பரம் மீது ஷூ வீசிய ஜர்னைல் சிங்கையும் அடுத்த தினம் மொபைலில் பேட்டி கண்டு வெளியிட்டேன்.

அ.க.: இன்னாரைப் பேட்டி எடுக்கலாம் என எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? பலரும் அறிஞர்களாய் இருக்கிறார்களே?


சீனிவாசன்: இது பாட்யூனிவர்சல். எந்த சப்ஜெக்டும் எடுக்கலாம். மனத்தில் தோன்றும் போது, உடனடியாக தொலைபேசியில் பேட்டி கண்டுவிடுவேன். பிரபலங்களில், இரா. செழியன், மற்றும் என். விட்டல் கூட என்னிடம் பேட்டி கொடுத்துள்ளார்கள். பல வெளிநாட்டுப் பிரபலங்களும் பேட்டி கொடுத்துள்ளார்கள்

அ.க.: நேரில் பார்க்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என யாரேனும் சொன்னதுண்டா?

சீனிவாசன்: இதுவரை அந்தப் பிரச்சினை வந்ததில்லை. இமெயில் அனுப்பினால், அவர்கள் உடனடியாக poduniversal தளத்திற்குச் சென்று பார்க்கிறார்கள். உடனடியாக ஒத்துக்கொண்டு விடுவார்கள்.

அ.க.: இத்தகைய ஒலிப் பதிவின் காப்புரிமை, பேட்டி கொடுத்தவர் - எடுத்தவர் இருவருக்கும் உரியதா?

சீனிவாசன்: காப்புரிமை, பதிப்பாளருக்குத்தான் உண்டு. இந்தப் பேட்டிகள், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் சார்பில் எடுக்கிறேன். ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. நல்ல விஷயங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் ஆவல். பாட் யூனிவர்சலுக்கு கிரெடிட் கொடுத்து அதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கிறேன். பலர் என்னிடம் அனுமதி கேட்டு உபயோகிக்கிறார்கள். பல சமயங்களில், பாட் யூனிவர்சலில் வந்தவுடன், மெயின் லைன் மீடியாக்களும் பிக் அப் செய்கின்றன. உதாரணம், அண்மையில் தேர்தல் தொடர்பாக, கலாம் கொடுத்த பேட்டி, இந்தியா முழுவதும் வெளிவந்தது.

அ.க.: ஒலிப்பதிவின் கால எல்லை அனைத்தும் 10 - 12 நிமிடங்கள் என இருக்கிறதே? இது திட்டமிட்டதா? அதற்குள் முடித்துவிடுவீர்களா?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இளைஞர்கள் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க ஆர்வமாக இருக்க மாட்டார்கள். பத்து நிமிடத்தில் இருந்தால், கேட்பதற்கு ஆர்வம் வரும். அதனால் தான், நான் 15 நிமிடங்களுக்கு மிகாமல் செய்வேன். சில சமயங்களில், சில பிரபலங்களின் பேட்டிகூட இருந்தாலும் கேட்பார்கள். அண்மையில் நான் வெளியிட்ட எஸ். வி. சேகர் பேட்டி, அதிகமான நேரம் இருந்தாலும், நிறைய பேர் கேட்டார்கள். இன்னும் கேட்கிறார்கள்.

அ.க.: ஒலிப் பதிவுகளை எப்படி திருத்துகிறீர்கள் (எடிட் செய்கிறீர்கள்)? இசை சேர்க்கிறீர்கள்?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இசைக்கும் காப்பிரைட் உண்டு. அதனால், திரு. ரங்கசாமி பார்த்தசாரதி அன்புடன் கொடுத்த இசையை நான் உபயோகிக்கிறேன். நான் முன்பு சொன்னபடி, அடாசிடியில் எடிட் செய்கிறேன். இது ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்.

அ.க.: தொலைபேசியில் பேட்டி எடுக்கும்போது மின் தடை, பிற தடைகள் ஏற்பட்டதுண்டா?


சீனிவாசன்: மின் தடை ஏற்பட்டாலும், தொலைபேசி வேலை செய்யும். இதை நான் லேப்டாப்பில் தான் ரிகார்ட் செய்கிறேன். அப்படி ரிகார்ட் செய்யும் போது, மெயின் பவரைத் துண்டித்து விடுவேன். மெயின் பவரில் ரிகார்ட் செய்யும் போது ஒரு 'ஹிஸ்' சவுண்டு வரும். அதைத் தவிர்க்க, பாட்டரியில் தான் ரிகார்ட் செய்கிறேன். அதனால், பவர் இல்லாவிட்டாலும், எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

அ.க.: ஆங்கிலத்தில் தொடங்கிய உங்கள் ஒலி இதழ் முயற்சி, தமிழுக்கு எப்போது வந்தது?

சீனிவாசன்: ஒரு வருடம் முன்பு தமிழில் 'வெற்றிக் குரல்' என்கிற பெயரில் வெளியிடுகிறேன். இதுவரை ஆங்கிலத்தில் சுமார் 200 பாட்காஸ்ட் செய்திருக்கிறேன். தமிழில் 10 செய்திருக்கிறேன். தமிழில் இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாருமே, பாட்காஸ்ட் செய்யவில்லை. தமிழில், நிறைய பாட்காஸ்ட் வரவேண்டும்.

அ.க.: அப்படி இல்லை... தமிழ் சிஃபியில் நான் தமிழில் ஏராளமான ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். பேச்சுகள், பேட்டிகள், பாடல்கள், கவிதை வாசிப்பு... என விதவிதமாகப் பல்வேறு கருப்பொருள்களில் வெளியிட்டுள்ளேன். ஒலிப் பத்திகளைத் (Audio Columns) தொடங்கினேன். நா.கண்ணன்(கொரியா), ஆர்.எஸ்.மணி (கனடா), ரமணன் (விசாகப்பட்டினம்), பெங்களூரிலிருந்து ஷைலஜா, நாகி நாராயணன், சென்னையிலிருந்து சுகதேவ், குடவாயில் சகோதரிகள்... எனப் பலரும் அதில் பங்கேற்றார்கள். அறிஞர் அண்ணாவின் 18 சொற்பொழிவுகள், 15.8.1947இல் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரை, ராஜாஜியின் உரை, எழுத்தாளர் ஜெயகாந்தனின் பேட்டி, விமலா ரமணியின் 3 மணிநேர வானொலிப் பேட்டி ஆகியவற்றை வெளியிட்டுள்ளேன். இசை ஆல்பமும் வெளியிட்டோம். சென்னை ஆன்லைன் தளத்தில் திருப்பாவையின் அனைத்துப் பாடல்களையும் ஒலி வடிவில் கேட்கலாம். பலரின் பேட்டிகளையும் கேட்கலாம். இதன் ஆறாம் திணை இணையதளத்தில் செய்திகளை ஒலி வடிவில் வழங்கி வந்தார்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் பல ஒலிக் கோப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிலரும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.

சீனிவாசன்: அதற்குத்தான் நான் சொன்னேன். எனக்குத் தெரிந்தவரை என்று. பலர் செய்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

அ.க.: ஒலிப் பதிவை வணிக ரீதியில் பயன்படுத்தும் உங்கள் முயற்சிகளை விவரிக்க முடியுமா?

சீனிவாசன்: பாட்காஸ்ட்டில் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்று வந்துவிட்டது. பாட்காஸ்ட் ஒரு மார்க்கெட்டிங் டூல். அது நெட்டில் இருப்பதால், கூகுள் சர்ச்சில் வருவது எளிது. பல பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் த்யாரித்து வெளியிடுகிறார்கள். அநத கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரித்துக் கொடுக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளேன்.

அ.க.: கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்றால் என்ன? இதற்கு அவர்கள் கட்டணம் செலுத்துகிறார்களா?

சீனிவாசன்: கார்பொரேட் பாட்காஸ்ட் என்பது, கம்பெனிகள், தங்களுடைய நிறுவனங்களைப் பற்றியோ அல்லது தங்களது பிராடக்ட் பற்றியோ ஒரு விளம்பரப் படம் எடுப்பது போல், பாட்காஸ்ட் செய்து விடலாம். அதைப் பற்றிக்கூட நான் http://corporatepodcast.blogspot.com என்கிற பிளாகில் எழுதியுள்ளேன். இது ஒரு மார்க்கெட்டிங் டூல். டாகுமெண்டரி தயார் செய்பவர்கள், அதற்கு சார்ஜ் செய்வதில்லையா? அதுபோல், கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரிப்பதற்கும் சார்ஜ் செய்கிறேன். அது டாகுமெண்டரி தயாரிப்பதில் ஆகும் செலவில் மிக மிகக் குறைந்த அளவே ஆகும்.

அ.க.: இணையதளங்களில் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு வீடியோ, பிளாஷ், கிராபிக்ஸ்... போன்ற கவர்ச்சிகரமான முறைகள் இருக்கையில் ஒலிப்பதிவு எவ்வாறு அவர்களைக் கவரும்?

சீனிவாசன்: அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடனதல்ல. அவை அனைத்தும், complementary to each other.. தற்போது, சோஷியல் மீடியா பாப்புலராக வரும்போது, SEO பற்றியெல்லாம் பேசுகிறோம். இது சோஷியல் மீடியா வகையைச் சார்ந்த்து. கூகுள் சர்ச்சில் சீக்கிரம் வந்துவிடும். ஆனால், பிளாஷ் அப்படி வருவதாக எனக்குத் தெரியவில்லை. அனைத்தும், ஒன்றுக்கு ஒன்று துணையானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், சோசியல் மீடியா அபரிமிதமான அளவு வளர்ச்சி அடைந்து விடும். இது இளைஞர்களூக்கான மீடியா

அ.க.: நீங்கள் தயாரிக்கும் காப்பொரேட் பாட்காஸ்ட், அந்த நிறுவனங்களின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா? உங்கள் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா?

சீனிவாசன்: அவர்களது இணைய தளத்திலும் வெளியிடுவார்கள். என்னுடைய தளத்திலும் போடுவேன். விளம்பரத்திற்குப் பல யுக்திகள் உண்டு. எந்த யுக்தியால் அல்லது டூலால் வியாபாரம் ஆகியது என்று கண்டுபிடிக்க முடியாது. அனைத்து டூல்களையும் உபயோகிக்க வேண்டும். பாட்காஸ்ட்டும் ஒரு முக்கியமான, இளைஞர்களைக் கவரக்கூடிய சாதனம். டாகுமெண்டரி பிலிம் பண்ணுகிறார்கள். அதற்குச் செலவு அதிகம். பாட்காஸ்ட்டில் செலவு மிகவும் மிகவும் குறைவு. ரீச் அதிகம்.

அ.க.: எடுத்துக் கொடுத்த பிறகு அது, நிறுவனங்களின் உரிமைப் பொருளாகிவிடுமா?

சீனிவாசன்: அந்தப் பிரச்சனை இதுவரை எழவில்லை. தற்போது, என்னுடைய கஸ்டமர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் செய்து கொடுக்கிறேன்.

அ.க.: நேரடியாக இணையதளத்தில் மட்டும் கேட்காமல், எம்பி3 வடிவில் தரவிறக்கவும் வாய்ப்பளித்துள்ளது ஏன்?

சீனிவாசன்: பல இடங்களில் பிராட்பேண்ட் சரியாக இருக்காது. கேட்பதற்கு பிராட்பேண்ட் வேண்டும். அது சரியாக இல்லையேன்றால், பதிவிறக்கம் செய்து கேட்க வசதி உள்ளது.

அ.க.: ஒருவரைப் பேட்டி எடுப்பதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் உரையாட முயன்றதுண்டா? (கான்பிரன்ஸ் கால்)

சீனிவாசன்: இதுவரை முயற்சி செய்ததில்லை. இதனைச் செய்ய வாய்ப்பு உண்டு. அதன் தொழில் நுணுக்கங்களைச் சரியாக அறிந்துகொள்ள் வேண்டும். தேவைப்பட்டால் செய்யலாம்.

அ.க.: ஒலி இதழ், வணிக ஒலிப்பதிவு குறித்துப் பயிற்சி அளிக்கும் திட்டம் உண்டா?

சீனிவாசன்: என்னிடம் வந்து கேட்பவர்களுக்கு என் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்கிறேன். பல விஷயங்கள், நான் என் அனுபவத்தில் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன். அதைக்கூட கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். என்னுடைய ஆசை பலர் பாட்காஸ்ட் செய்ய வேண்டும் என்பது தான்.

அ.க.: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

சீனிவாசன்: நல்ல பாட்காஸ்டுகளை, இப்போது போன்று தரமான பாட்காஸ்டுகளை வெளியிட வேண்டும்.

அ.க.: ஒலிப்பதிவினைப் பேட்டி எடுக்க மட்டும் பயன்படுத்துகிறீர்களே, உங்கள் சொந்தப் பேச்சினைப் பதிய முயலவில்லையா? உங்கள் சொந்தக் கருத்துகளைப் பேசலாம் இல்லையா?

சீனிவாசன்: நான் தொலைக்காட்சிகளில் அளித்த பேட்டிகள், நான் சில சமயங்களில் பேசிய பேச்சுகள், சிலவற்றை வெளியிட்டுளேன்.

அ.க.: மற்றவர்களைப் பேட்டி எடுப்பதை விட நாம் பேசி வெளியிடுவது, மிக எளிது இல்லையா?

சீனிவாசன்: இன்றும், நான் இமயம் டி.வியில் பேசிய attitude பற்றிய ஒலி இதழ் அதிக அளவில் கேட்கப்படுகிறது. அது தமிழ்ப் பேச்சு.  நாமே பேசி வெளியிடுவது சுலபம். இருந்தாலும், நாமே பேசிக்கொண்டிருந்தால, யார் கேட்பார்கள். ஒன்று அல்லது இரண்டு சரி. அறிஞர்கள், பிரபலங்களின் பேட்டிகளை விரும்புவார்கள். பல தரப்பட்ட கருத்துகளையும் கொடுக்கலாம்.

அ.க.: அது சரி. ஊக்கம் மிகுந்த தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். அன்புகூர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

சீனிவாசன்: மிக மிக நன்றி. என்னுடைய கருத்துகளைக் கேட்டதற்கு. ஜெய் ஹிந்த்.

அ.க.: :-) வந்தே மாதரம்.

நன்றி: சென்னை ஆன்லைன்

1 comment:

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_11.html