Sunday, January 29, 2006

வீடு தேடி வரும் இணையக் கல்வி



தமிழ்கூறும் நல்லுலகின் கல்வி வரலாற்றில் மாபெரும் மவுனப் புரட்சி அரங்கேறி வருகிறது. அதுதான் இணையவழிக் கல்வி. இதற்காகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது.
இணைய வழியில் எவ்வாறு கல்வி கற்பிக்கிறீர்கள் என இந்த அமைப்பின் இயக்குநர் பொன்னவைக்கோவைக் கேட்டோ ம். அவர் கூறினார்:

"உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்றவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்துகொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிப்பதே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கம்.

இதில் தொடக்கக் கல்வி, உயர் கல்வி என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.

தொடக்கக் கல்வியில் அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை என்று 3 பகுதிகள். அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கிறோம். எழுத்து உருவத்தோடு அதை உச்சரிக்கும் முறையையும் அந்த எழுத்து இடம்பெறும் சொல்லையும் அச்சொல்லின் அர்த்தப் படத்தையும் காட்டுகிறோம். இந்தப் பாடங்களை ஆங்கிலம் வழியாகவும் கற்பிக்கிறோம். இதனால் தமிழ் பேசத் தெரியாதவர்களும் எளிதாக எழுதவும் பேசவும் முடியும். தமிழின் எல்லா எழுத்துகளையும் படடியல் இட்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் எந்த எழுத்தில் அம்புக் குறியை வைத்து அழுத்தினாலும் அதன் ஒலி கேட்கும்.

ஒவ்வோர் எழுத்தையும் அறிமுகப்படுத்தும் பாடல் உண்டு. எடுத்துக்காட்டுக்கு 'மா' என்ற சொல்லை அறிமுகப்படுத்த 'மாம்பழமாம் மாம்பழம் மாமரத்து மாம்பழம்' எனத் தொடங்கும் பாடல் ஒலிக்கும். இதை இசையோடு கேட்கலாம். எழுத்துப் பயிற்சியில் ஒவ்வோர் எழுத்தையும் மாணவர் விரும்பும் நிறத்தில் எழுதிப் பழகலாம்.

தொடக்கக் கல்வியில் இடைநிலை, மேல்நிலை விருப்பப் பாடங்களை வடிவமைத்து வருகிறோம். விரைவில் அவை கற்பிக்கப்படும்.

தொடக்கக் கல்வியில் பாடங்களைக் கற்பித்துவிட்டு மாணவ - மாணவியர் தன்னைத் தானே சோதனை செய்யும் முறையும் உண்டு. "ட" என்ற ஒலி ஒலித்தவுடன் மாணவர் "ட" என்ற எழுத்தை அழுத்தினால் 'சரி' என வரும். வேறு எழுத்தை அழுத்தினால் 'தவறு' என வரும். இதன் பிறகு சொற்களைப் படிக்கவும் தகவல் பரிமாறவும் எழுதவும் படிப்படியாகக் கற்பிக்கப்படும்.

உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பத்தோடு பாடங்களைப் போதிக்கிறோம்.

சிலப்பதிகாரத்தைப் பற்றிய பாடத்தில் அதன் முழு படக்கதையும் வசனங்களும் உண்டு. உதாரணமாக, திருமணக் காட்சியில் வேள்வித் தீ எரிவதும் மாதவி நடனமாடுவதும் கண்ணகி சிலம்பை உடைத்தலும் உண்மையான காட்சிகள் போலத் தெரியும்.

மணிமேகலைப் பாடத்தில் அமுதசுரபியில் இருந்து சோறு எடுத்து எடுத்துக் கொடுக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும்.

இசையைப் பற்றிய பாடத்தில் ஒவ்வொரு ராகத்தையும் திரைப்படப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்துகிறோம். 'அரிகாம்போதி ராகம்' என்றால் மாணவருக்குத் தெரியாது. ஆனால், அந்த ராகத்தில் உள்ள 'சந்திரனைத் தொட்டது யார்?' என்ற திரைப்பாடல் தெரியும். அதனால் அந்தப் பாடலை இசைக்கிறோம். 'பூங்காற்று திரும்புமா?', 'கங்கைக்கரை மன்னனடி' போன்ற பாடல்களும் உண்டு.

பாரதியார் பற்றிய பாடத்தில் தேசிய விருது பெற்ற 'பாரதி' படத்திலிருந்து பல காட்சிகளைக் காட்டுகிறோம். பாரதியார் தொடர்புடைய புகைப்படங்கள், திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளோம். இதேமாதிரி பாரதிதாசனுக்கும் உண்டு.

வள்ளுவர் பற்றிய பாடத்தில் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற வரியைக் காட்சியாக்கி உள்ளோம்.

ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அந்தத் துறை வல்லுநரின் உரை வீடியோ காட்சியாக இருக்கிறது. பாடங்களின் இறுதியில் தன்மதிப்பீட்டு வினாக்கள் கேட்டுள்ளோம்.

இலக்கியம், இலக்கணம், தமிழர் வாழ்வியல், இலக்கிய வரலாறு, மொழி வரலாறு, கலைகள், சமயம் - தத்துவம், நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், திறனாய்வு ஆகிய 10 பிரிவுகளில் சான்றிதழ், பட்டயம், பட்டம் வழங்குகிறோம்" என்றார் பொன்னவைக்கோ.

நன்றி: ராணி வார இதழ் - 27.5.2001

(இந்த நேர்காணல், 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. இப்போது பொன்னவைக்கோ, தமிழ் இணையப் பல்லைக்கழகத்தில் பணியாற்றவில்லை.)

No comments: