Friday, September 23, 2005

நான் காட்சி மனிதன்



கிறிஸ்டோபர் ஊர்ஸ்டு : அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பிறந்தவர். புத்தாக்க எழுத்து - வரலாறு பாடத்தில் இளங் கலைப் பட்டமும் கல்வியில் முதுகலைப் பட்ட மும் பெற்றவர். பள்ளி மாணவர்களுக்கு வரலாறு - இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றியவர். தென்னாப்பிரிக்காவில் சர்வதேச அமெரிக்கப் பள்ளியில் நிர்வாகியாக விளங்கியவர்.

அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கௌத மாலா ஆகிய நாடுகளில் புகைப்படக் காட்சிகள் நடத்தியவர். அண்மையில் இவரின் "இன்னொரு யதார்த்தம்' (பட்ஹற் ர்ற்ட்ங்ழ் ழ்ங்ஹப்ண்ற்ஹ்) என்ற புகைப்படக் காட்சி, இந்தியாவில் பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. கேரளாவில் விரைவில் நடக்க இருக்கிறது.
உலக அளவிலான புகைப்படப் போட்டி யில் முதல் பரிசு பெற்றவர். தற்போது, சென்னை யில் உள்ள அமெரிக்கத் தகவல் மையத்தின் துணை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருடன் ஒரு சிறிய நேர்காணல்.


புகைப்பட ஆர்வம் எப்படி வந்தது? புகைப்படக் கலைஞராக நீங்கள் மலர்ந்தது எப்படி?

படங்கள் என்றாலே எப்போதும் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. சிறு வயதில் மணிக்கணக்கில் எங்கள் குடும்ப ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து அதிலுள்ள அரிய பழைய படங் களை வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னைப் பொறுத்தவரை புகைப்படங்கள் நம்மை இன்னொரு காலத்திற்கு அழைத்துச் செல்லும் அபூர்வ தன்மை கொண்டவை என்றே கருதுகிறேன்.

மேலும் ஒரு புகைப்படத்தைப் பார்ப்பதும் அதன் மூலம் எதைப் புரிந்துகொள்கிறோம் என்பதும் முற்றிலும் மனம் வயப்பட்டது. ஒரு புகைப்படக் கலைஞன் திட்டமிட்டே ஒரு படத்தை எடுத்தாலும், அதைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோணத்தில் அதைப் புரிந்துகொள்கிறார்கள்.

மறுபடியும் யாராலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என்று தோன்றும் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது எனது வழக்கம். கால ஓட்டத்தில் சமூகம் மறந்தவற்றைக் கூர்ந்து கண்டுபிடித்து எனது புகைப்படங்கள் வாயிலாக இன்றைய மனிதர்களின் பார்வைக்குப் படைக்க வேண்டும் என்பதே என் தாகம்.

அதனால்தான் எனது புகைப்படங்களை 'கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள்' என்று நானே வருணிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளாக நான் தொடர்ந்து எனது கேமிரா வழியாகக் காட்சிகளைப் பதிவு செய்து வருகிறேன். அந்த வகையில் நான் முற்றிலும் ஒரு காட்சி மனிதன் என்றே என்னைக் கருதுகிறேன்.

எப்படிப்பட்ட காட்சிகள் உங்களைப் புகைப்படம் எடுக்கத் தூண்டும்?

வண்ணம், பின்னணி, வடிவம் என்று எல்லா வகைகளிலும் என் பார்வைக்குச் சரியாகப் படும் காட்சிகளையே நான் படமாக எடுக்கிறேன். "வியூ ஃபைண்டர்' மூலம் பார்க்கும் முன்னோட்டக் காட்சியிலேயே பெரிதும் முடிவுக்கு வந்து விடுவேன்.

இன்னொரு முக்கியமான அம்சம், நான் வேகமாக, மிக வேகமாகப் படம் எடுக்கக் கூடி யவன். ஆகவே அநேகமாகக் காட்சியை முடிவு செய்துவிட்டு கேமிராவை "கிளிக்' செய்வதற்கு முன்னால், எதைப் படம் பிடிக்கிறேன் என்று ஒரு முறை கூர்ந்து கவனிப்பேன்.

அதே நேரத்தில் நான் சகட்டு மேனிக்குப் படங்களை எடுத்துத் தள்ளிப் புகைப்படச் சுருள்களை வீணடிக்க மாட்டேன். ஒரு காட்சியை அதிகபட்சம் மூன்று தடவைக்கு மேல் நான் "கிளிக்' செய்வது அபூர்வம். நான் எதிர்பார்க்கும் காட்சி, அந்த மூன்று "கிளிக்'குகளில் கிடைக்கும். இல்லையெனில் அப்படியொரு காட்சி அங்கிருக்க வாய்ப்பில்லை.

"வியூ ஃபைன்டரில்' பார்க்கும் போதே எனக்குத் தயக்கம் இருந்தால் பெரும்பாலும் அந்தக் காட்சியைப் படம் எடுப்பதைத் தவிர்த்து விடுவேன். சுருங்கச் சொன்னால், உள்ளுணர்வுதான் என்னைப் படம் எடுக்கத் தூண்டுகிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வளவு ஆண்டுகளும் படம் எடுத்து வருகிறேன்.

உங்கள் புகைப்படக் கோட்பாடு என்ன?

""சமூகத்தின் இன்னொரு யதார்த்தத்தை நமது விருப்பம் போல் பதிவு செய்யக்கூடிய ஒரு சாதனம், கேமிரா'' என்பது பிரபல புகைப்படக் கலைஞர் ஜெர்ரி உல்ஸ்மேனின் கூற்று. அதை யொட்டியே என் கண்காட்சிக்கு "இன்னொரு யதார்த்தம்' என்று தலைப்பிட்டேன்.

"நாங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சி களைத்தான் நீங்கள் படமாக எடுக்கிறீர்கள். ஆனாலும் அது இத்தனை அழகாக இருக்கிறதே' என்று பலர் என்னிடம் வியந்து கூறுகிறார்கள். எனக்கும் ஒரு வகையில் அது ஆச்சரியமாகவே இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள கோடானு கோடி காட்சிகளிலி ருந்து எவ்வாறு இப்படிப் படம் எடுக்கிறேன்..?

சூழலை விருப்பத்திற்கேற்றவாறு கையாள்வதில் எனக்கு ஓரளவுக்கேனும் திறமை உண்டு என்ற உணர்வின் வெளிப் பாடாக அது இருக்கலாம். அதனால்தான் எப்படிப்பட்ட காட்சியையும் என்னால் அழகாகப் பதிவு செய்ய முடிகிறது. அது மிகச் சாதாரணமாக இருந்தாலும் சரி அல்லது கறைபடிந்த சுவராகவோ, சுடுகாடா காவோகூட இருந்தாலும் சரி, எனது கேமிரா அழகாகவே பதிவு செய்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பே எனக்கு ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது. காட்சிகளை அழகாகப் பதிவு செய்தும் ஒருவன் சீரியஸôன கலைஞனாக இருக்க முடியும் என்பதே அது. ஒரு புகைப்படம் மிக அழகாக இருந்தால் உயர்தர கலைக்குரிய அம்சம், அதில் நிச்சயம் இருக்காது என்ற எண்ணம் இப்போதும் அமெரிக்காவில் உண்டு. ஆனால் என் புகைப்படங்கள் அவ்வாறானவை அல்ல. அழகும் அதே நேரத்தில் ஆழமான உள்ளடக்கமும் நிறைந்தவை.


உங்கள் புகைப்படத்தில் ஒளியின் பங்கு என்னவென்று சொல்ல முடியுமா?


ஒளியும் புகைப்படமும் பிரிக்க முடியாதவை. எனது வீதிக் காட்சிகள் அனைத்திலும் ஒளியின் சுவடு தெரியும். அதிகாலையில் அல்லது சூரியன் மங்கும் பிற்பகல் வேளையில் நான் அதிகம் விரும்பிப் படம் எடுப்பதே அதற்குக் காரணம்.

ஒளியின் தடயங்களைக் கொண்ட இந்தப் படங்கள் எனக்கு எதை நினைவூட்டு கின்றன தெரியுமா..? இயற்கையின் முன்னால் எல்லாமே கடந்து செல்பவைதான், மனிதர்கள் உள்பட என்ற உண்மையைத்தான். என் படத்தில் பார்க்கும் மனிதர்கள், இயற்கையின் முன்னே கடந்து செல்பவர்களாகத்தான் காட்சியளிப்பார்கள்.

எனது படங்களில் பெரும்பகுதி சற்றே புரிந்துகொள்ளக் கடினமான தன்மையும் மீதி அன்றாட வாழ்வின் நேரடி அசைவுகளும் கொண்டதாக இருப்பதற்கும் இந்தப் பார்வைதான் காரணம். வெற்றுச் சுவரோ, வெறிச்சோடிய தெரு முனையோகூட மனிதர்கள் விட்டுச் சென்ற தடயங்களைப் பிரதிபலிப்பவைதான். அதைத்தான் எனது படங்களிலும் பார்க்கிறீர்கள்.