Sunday, January 29, 2006

தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?




ஒரு நாட்டுக்கான சட்டதிட்டங்களைவிட, ஒரு பெண்ணுக்கான சட்டதிட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. பிறக்கும் ஆண் குழந்தை கண் திறப்பதற்கு முன்பே ஆணையிடக் கற்றுக்கொள்கிறது. பெண் குழந்தையோ, கத்தி முனைக்குத் தப்பித்தான் கண்களையே திறக்கிறது.

காலமெனும் பெருவெள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதால் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எழுச்சிமிக்க பெண்களின் புதிய யுகம் மலர்ந்திருக்கிறது. மரபின் மண்ணில் கால்பதித்துப் புதுமையின் வானில் தலை நிமிர்த்துவதாய் உள்ளது, இன்றைய பெண்ணியம். ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, 'ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்கவேண்டும்?' என்று பல்வேறு தளங்களில் உள்ள பெண்களைக் கேட்டோ ம். இதோ, பெண்குலத்தின் குரல்கள்:

கீதா (குடிசைவாழ் பெண்மணி)

தமிழ்ப் பொண்ணு, அடக்க ஒடுக்கமா இருக்கணும். ஒழுங்கா டிரெஸ் போடணும். சேலை கட்டணும். சல்வார், சுடிதார் போடலாம்.

நேரத்துக்குப் போயிட்டு நேரத்துக்கு வரணும். குடும்பத்துக்கு அடங்கி இருக்கணும். நம்ம இஷ்டத்துக்கு இருக்கக் கூடாது. பெரியவங்க பேச்சக் கேட்கணும்.

வசதி இருந்தா ஆம்பளையவிட பொம்பளை அதிகம் படிக்கலாம். ஆம்பளை அல்லது பொம்பளை ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் படிக்க வைக்கணும்னா, நான் பொம்பளையத்தான் படிக்க வைப்பேன். ஆம்பளைப் பையன் வெளியில போறான், வரான். நாலும் தெரிஞ்சுக்குவான். தாய், தகப்பன் அனுமதியிலதான் பொம்பளை வெளியில போவுது. அதுக்குத்தான் படிப்பு வேணும்.

படிச்ச பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, வீட்டுக்காரர் நல்லவரா இருந்தா வெளியில வேலைக்குப் போவலாம். வேலைக்குப் போறதுக்கு மட்டுந்தான் படிப்புன்னு இல்ல. பஸ் நம்பர் பாக்கறதுக்கு, பேப்பர் படிக்க எல்லாத்துக்கும் படிப்பு உதவும்.

நான் ஆறாவது வரைக்கும் படிச்சேன். கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சதால புத்தி சுமாராத்தான் இருக்குது. எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. அதை நான் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்க வைக்கமாட்டேன். கஷ்டப்பட்டாவது பீஸ் கட்டித்தான் படிக்க வைப்பேன். தமிழ்ப் பொண்ணு தவறான வழியில போகக் கூடாது. பொட்டு அவசியம் வெச்சுக்கணும். நகையில்லாமப் பெண்கள் இருப்பாங்களா, என்ன?

கல்யாணத்துல பொண்ணுக்குத் தாலி வேணும். பாதுகாப்புக்குத் தாலி அவசியம். தமிழ்ப் பொண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கணும்.

செளந்திரவல்லி (குடும்பத் தலைவி)

அவள் புடவை கட்டணும். பொட்டு வைக்கணும். அந்தக் கால நகைகள் அணியணும். கண்ணாடி வளையல் கூடாது. உடனே உடையும். அது அபசகுனம். பொருத்தமான அலங்காரம் வேணும். பட்டன் தோடு, நீளமாத் தொங்குற பிளாஸ்டிக் தோடு கூடாது.

கணவன் - மனைவி இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அன்போட இருக்கணும். கணவன் சரியில்லை என்றாலும் பெண் ஓரளவு பொறுத்துப் போக வேண்டும். அவன் ரொம்ப அராஜகம் செய்தால், அவ வெளியே வரலாம்.

எங்கே போனாலும் சொல்லிட்டுப் போகணும். இரவு வெளியே போகக் கூடாது. ஏன்னா, உலகத்துல பாதுகாப்பில்ல. சமையல், வீட்டுவேலை அவசியம் கத்துக்கணும்.

கணவனுக்கு முந்தி எழுந்துக்கறது, அவன் கால்தொட்டு வணங்குறது, அவன் எள்ளுன்னா எண்ணெயா நிக்கறது... எல்லாம் செய்யலாம்தான். ஆனா, அதுக்குத் தகுதியாய்க் கணவன் நடந்துக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் கணவனுக்கு மனைவி கால்பிடிச்சு விடலாம்; மனைவிக்கும் கணவன் கால்பிடிச்சு விடலாம்.

பொண்ணு தன்னை நம்பணும். அப்புறம்தான் தெய்வத்தை நம்பணும். நித்திய பூஜைகள் செய்யணும். வேலைக்குப் போறவங்க, முடியறப்ப செய்யலாம்.

சுதா (சட்டக் கல்லூரி மாணவி - பார்வையிழந்தவர்)

கட்டப்பட்ட மாடு மேய்வது போல்தான் பெண் இருக்கிறாள். சுடிதாரும் ஜீன்சும் அணிபவள்கூடத் தமிழ்ப் பெண்தான். தைரியம்தான் அவளின் அடையாளம். விஷய ஞானம் அவளுக்கு வேண்டும். பயம் கூடாது. எதிலும் துணிந்து இறங்கவேண்டும். தான் எப்படி இருக்கவேண்டும் என்று அவள் தானே தீர்மானிக்க வேண்டும். ஃபேஷன் ஷோ, அழகிப் போட்டிகள் அதிகமாவது கூடாது. நல்லவை வாழ வேண்டும். தீயவை வீழ வேண்டும்.

முன்பு ஆண்களைப் பார்த்தாலே தப்பு; பேசினாலே தப்பு என்ற நிலை இருந்தது. இப்போது சகஜமாகத் தொட்டுப் பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பின் அறியாதவருடன் பேசும்போதுகூட 'ஹாய்' சொல்லிக் கைகுலுக்குவது இயல்பாய் இருக்கிறது. அதனால் 'கற்பு' என்பதன் அர்த்த எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் தாய்மைதான் கற்பு. பாலியல் வன்முறைக்கு ஆளானவள், தற்கொலையும் செய்யக் கூடாது; அவனையே திருமணமும் செய்யக் கூடாது. அவன் மீது வழக்குத் தொடுக்க முன்வர வேண்டும்.

தவறு, சரி என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டும். அவற்றைத் தன் வீட்டாருக்கு விளக்க வேண்டும். மூன்று வாய்ப்புகளிலும் அவர்கள் ஏற்காமல் எதிர்ப்பார்களேயானால், அவள் வெளியே வந்துவிடலாம். தன் காலில் நிற்கும் சக்தி அவளுக்கு உண்டு.

குறிக்கோள், தன்னம்பிக்கை, தைரியம், சமாளிக்கும் திறன் என்ற நான்கு குணங்களைப் பெண்கள் குறைந்தபட்சம் கொண்டிருக்கவேண்டும்.

குணசுந்தரி (முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்)

தமிழ்ப் பெண் என்ற சொல்லே அவளை மறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறித் தந்தை வழிச் சமூகத்திற்கு வந்த பிறகுதான் ஆண் முக்கியமானவன் ஆனான்.

'வினையே ஆடவர்க்கு உயிரே' - என்பதை நான் ஏற்கமாட்டேன். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' - என்ற பாடல், பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. பெண் அரவணைக்காவிட்டால் பிள்ளைகள் தறுதலைகளாகத்தான் திரிவார்கள்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எல்லா உயிர்களிடமும் உள்ளன. அவற்றைப் பெண்ணுக்கு மட்டுமே பொருத்தியுள்ளனர். பெண்களுக்கான குணங்கள் ஆண்களிடமும் இருக்கக் கூடாதா, என்ன?

பெண்ணென்றால் குனிந்துதான் நடக்கவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. பெண்ணுக்குக் கல்வி அவசியம். ஆனால், அந்தக் கல்வி, சூழலையும் வேலைவாய்ப்பையும் ஒட்டியதாக இல்லை. இன்று பெண்ணியம் பேசுபவர்கள்கூட அவர்கள் பேசுவதுபோல் வாழவில்லை.

உடையில் ஒரு பாரம்பரியம் உள்ளது. சீனாவில் விழாக்களின் போது மரபுசார் உடைகளை அணிகிறார்கள். இங்கே சேலை கட்டும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சுடிதார் நல்லதுதான். ஆனால், அது தமிழ் அடையாளம் இல்லையே!

வெப்ப நாட்டில் கதராடை அவசியம். ஆனால், அது இங்கே ஏழ்மையின் சின்னமாய் இறங்கிப்போய் விட்டது. வெப்பம் நிறைந்த இந்த நாட்டில் ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். பெண்களும் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

எங்கும் எதிலும் கலப்பு வந்துவிட்டது. பண்டிகைகளிலாவது பழக்கவழக்கம், மரபு, பண்பாட்டு அடையாளம், அணிகலன் என எல்லாவற்றையும் மீட்கவேண்டும்.

தாலி, மெட்டி போன்றவை தமிழ் அடையாளங்கள் இல்லை. அக்னி முன்பு திருமணம் செய்வது தமிழர் வழக்கமில்லை. தமிழர் அடையாளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. நம் வழக்கங்களை நமது என்று சொல்லவே வெட்கப்படுகிறோம். காது குத்துதல், நரம்புகளுக்கு நன்மை சேர்க்கிறது. மஞ்சள் பூசுதல் அழகுப் பசைகளுக்கும் மருந்துகளுக்கும் மாற்று; உடலைப் பாதிக்கிறது. உடல் வெப்ப நிலைக்கேற்பவே வைரத்தை அணிந்து வந்தனர்.

நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண காரியத்தோடுதான் செய்தார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது. ஆய்வு முக்கியம்.

சரசுவதி (பேராசிரியர், இராணி மேரி கல்லூரி)

பெண்ணுக்குப் பிறக்கவே சுதந்திரம் இல்லை. எல்லாத் தளங்களிலும் அவள்மேல் வன்முறை திணிக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் அவள் வாழ்கிறாள். அவள் ஒரு போகப் பொருளாக, பிள்ளை பெறும் யந்திரமாக, அழகுப் பொருளாகக் காட்டப்படுகிற போக்கு அடியோடு மாறவேண்டும். பெற்றோருக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, தன் குடும்பத்துக்காக வாழும் தியாகியாகவே அவள் உருவகம் உள்ளது. தனக்காக வாழ்கிற, தன் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்கிறவளாக அவள் இல்லை. ஒரு சராசரித் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருக்கிறாள். இந்த 'லட்சுமணக் கோட்டினை' அவள் தாண்டவேண்டும்.

எவ்வளவோ போராடி, இட ஒதுக்கீடு மூலம் அவளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தினால், மாநகராட்சி உறுப்பினர்களாகும் பெண்கள் பலரும் தம் கணவருக்குப் பினாமிகளாகவே செயல்படுகிறார்கள். அதனால், சலுகைகளைக் காட்டி மட்டும் பெண்களை முன்னேற்றிவிட முடியாது. அவளுடைய அறிவாற்றைலையும் வினையாற்றலையும் வளர்த்தெடுக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பிள்ளையைப் பெறுபவள்தான் குழந்தைக்குத் தலையெழுத்தை (முதலெழுத்து) வழங்கியிருக்க வேண்டும். ஆணாதிக்கச் சமூகம் அதை மாற்றியது. ஆண் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் பெண் சேர்ப்பது தமிழ் வழக்கம் இல்லை. அது, மேலைநாட்டு வழக்கம். வரதட்சிணை கூடத் தமிழ் வழக்கம் இல்லை.

ஒரு தமிழ்ப் பெண் என்பதைவிட, அடிப்படையில் ஒரு மனுஷியாக அவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அக்கறை அதிகம். மனுஷியானவள் சுதந்திரமாக இருக்கவேண்டும். எதற்கும் யாரையும் சார்ந்து வாழாத நிலை பெண்ணுக்கு வேண்டும். பொருளாதாரம், கல்வி, முடிவெடுத்தல்.... முதலான சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் அவளுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும். தன் சுவைக்கும் வசதிக்கும் ஏற்ப, அவள் உடை அணியவேண்டும்.

இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த எல்லைக் கோடுகளையும் நான் இட விரும்பவில்லை. சர்வ சுதந்திரமாகத் தன்னைத் தானே அவள் தீர்மானிக்கட்டும்.

நன்றி: தினமணி கதிர் - 09.04.2000

5 comments:

Anonymous said...

mika arumaiyana oru paetti...vaztthukkal

புரட்சி தமிழன் said...

நல்ல பதிவு பேட்டிகள் அருமை வாழ்த்துக்கள்.

இம்சை அரசி said...

இதையும் சேர்த்து கொள்ளுங்கள் :)

இம்சை அரசி(தமிழ் வலைப்பதிவாளர்):

தமிழ்ப்பெண் சமுதாயம், கலாச்சாரம் என்ற பெயரில் நல்ல விஷயங்களை தடுக்கும்போது பாரதி கண்ட பெண்ணாய் பொங்கியெழ வேண்டும். உடைகள், ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் தனது ரசனைக்கேற்றவாறு இருக்க வேண்டும். ஆணுக்கு சமமாக எல்லா உரிமைகளும் பெற்றிருக்க வேண்டும்.

காலைத்தொட்டுக் கும்பிடுவதற்கு கணவன் ஒன்றும் தெய்வம் இல்லையே. அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லையென்று இருக்க வேண்டும். பொட்டு, தாலி, பூ பொன்ற விஷயங்களில் விருப்பத்திற்கு விரோதமாய் இருக்க கூடாது.

கற்பு விஷயம் ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது. ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. இருவருமே அதில் தமிழ் பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

Anonymous said...

நம்ம தமிழச்சி போல இல்லாவிட்டால் போதும் சாமி.

புள்ளிராஜா

samukam.com said...

came across this new Tamil social networking website called Samukam.com. It’s like Facebook and MySpace but for Tamils. Because it’s new it doesn’t seem to be flooded with tons of members. But, like any other social site you can post your own pix, videos etc and do the usual blogging, forums etc. It’s got other fancy features too. And as they say on the site might end up being great for Samukam-ising with friends.

Revathi